மோடியும், அம்பானியும் சேர்ந்து ராணுவம் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் ’: ராகுல் குற்றச்சாட்டு..

ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில்

பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புப் படைகள் மீது துல்லியத் தாக்குதல்(சர்ஜிகல் ஸ்டிரைக்) நடத்திவிட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர்விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் பயணம் சென்றிருந்த போது பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தைச் செய்தார்.

ஆனால், மத்திய அ ரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் இணைந்து கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடுவதற்குப் பதிலாக, திவாலான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டது.

இதையடுத்து, ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது, காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் அதிகமான விலைக்கு விமானம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே அங்குள்ள ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ”இந்தியாவில் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமானத்தைத் தயாரிக்கக் கூறியதே இந்திய அரசு.

வேறு நிறுவனங்களைத் தேர்வு செய்ய எங்களுக்கு வாய்ப்பும் கொடுக்கவில்லை, அதிகாரமும் அளிக்கவில்லை” என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.

இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக விமர்சனங்களை மத்திய அரசு மீதும், மோடி மீதும் வைத்து வருகிறார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வெளியிட்ட பதிவில், “ பிரமதர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து தேசத்தின் பாதுகாப்புப் படைகள், ராணுவத்தினர் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் (துல்லியத்தாக்குதல்) நடத்திவிட்டார்கள்.

நாட்டைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் ரத்தத்தை மோடி அவமதித்துவிட்டார். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன். இந்தியாவின் ஆன்மாவுக்கு நீங்கள் துரோகம் இழைத்துவிட்டீர்கள்” எனச் சாடியுள்ளார்.