மு‌ல்லைப் பெரியாறு அணை பலமாக தான் உள்ளது: பொய் பரப்புரை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை :கேரள முதல்வர் எச்சரிக்கை..

மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக – கேரள மாநில எல்லையில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா மற்றும் தமிழகத்துக்கு இடையே தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.

இந்த அணையின் பலம் குறித்து இரு மாநில மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கும் கருத்துக்களைக் கேரள மாநிலத்தவர் பகிர்ந்து வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் எனவும் கேரள மாநில மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மு‌ல்லைப் பெரியாறு அணை குறித்து பீதியை கிளப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதா? என கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் நேற்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் உயிரிழக்க போவதாகவும் சமூக வலைத்தளம் மூலம் சிலர் வதந்தி பரப்புவதாக கூறினார். உண்மையில் அதுபோன்ற ஆபத்தான நிலை ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

மு‌ல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

அதேநேரம் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.