நாகையை சூறையாடிய கஜா: மிக மோசமாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம்

கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது.

அப்போது வீசிய பலத்த காற்று மற்றும் கொட்டிய கனமழையால் நாகை மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தட்டிகள், பேனர்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை காற்றில் சேதம் அடைந்தன. மீட்பு பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கஜா புயல் காரணமாக வேதாரண்யம் நகர் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் தகவல் தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் வேதாரண்யத்தில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை உள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்ய மக்கள் தவித்து வருகின்றனர். கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தால் வேதாரண்யம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் மரங்கள் முறிந்துள்ளதால் வேதாரண்யத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சாலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி அதிகாரிகள் வேதாரண்யம் நோக்கி செல்ல வேண்டி உள்ளது.

கடலூரை பொறுத்தவரை தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. காற்றின் வேகமும் அதிகமாக உள்ளது. பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரைக்காலிலும் கோர தாண்டவம் ஆடியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை திரும்பிய இடமெங்கும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன.

கடைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர தட்டிகளும் தூக்கி வீசப்பட்டன. விளம்பர பேனர்கள் உள்ளிட்டவைகள்  காற்றில் அடித்து செல்லப்பட்டன. மரங்கள் சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் விழுந்து கிடக்கின்றன. தஞ்சை மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் மழையால் சேதம் ஏற்பட்டுள்ளது.

கஜா புயலின் தொடர்ச்சியாக நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.