நியூயார்க் பேருந்து முனையத் தாக்குதல்: ஒருவர் கைது..


அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள முக்கிய பேருந்து முனையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சிதத்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்

திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது, மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்துக்கு பிறகு பேசிய நியுயார்க் மேயர் பில் டி பிளேசியோ,”பயங்கரவாதிகள் ஜெயிக்க முடியாது” என கூறினார்.

இத்தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரான 27 வயதான வங்கதேச குடியேறி அகாயத் உல்லா, குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை தன் உடலில் சுற்றியிருந்ததால் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில், சந்தேகத்துக்குரியவராகக் கருதப்படும் நபர், துணிகள் கிழிந்து சிதறி, காயங்களுடன் தரையில் கிடப்பதையும், அவரது உடலில் வயர்கள் சுற்றப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

அந்த நபர் தனியாக செயல்பட்டிருப்பதாக நம்புவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு சம்பவம் நடந்த இந்த பேருந்து முனையம் உலகிலே மிகவும் பரபரப்பானது. வருடத்திற்கு 65 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்குப் பயணிக்கின்றனர்.

இந்தப் பேருந்து முனையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

”நான் சுரங்கபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். திடீரென வெடிப்பு சத்தம் கேட்டது. அனைவரும் ஓட தொடங்கினர்” என ஆண்ட்ரே ரோட்ரிக்ஸ் என்பவர் நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

நியூயார்கில் உள்ள சந்தேச நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் போஸ்டின் செய்தியின்படி, தற்போது இவர் ஒரு மின் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

அகாயத் உல்லாவின் குடும்பம் 2011-ம் ஆண்டு அமெரிக்காவுக்குக் குடியேறியுள்ளது. உல்லா தொடர்பாக எந்த குற்ற பதிவும் இல்லை எனவும், கடந்த செப்டம்பர் மாதம் அவர் வங்கதேசம் வந்ததாகவும் வங்கதேச அரசு கூறியுள்ளது.