பங்குச்சந்தை முறைகேடு வழக்கு : முன்னாள் சி.இ.ஒ சித்ரா ராமகிருஷ்ணா கைது …

தேசிய பங்குச் சந்தை முறைகேட்டு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராம் கிருஷ்ணாவை கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள்.
மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது சிபிஐ. தேசிய பங்குச் சந்தையில் 2003ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா.
அப்போது இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சாமியார் கூறியதாக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை வியூக அதிகாரியாக நியமிக்கப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது.

இது தொடர்பாக கடந்த 25ம் தேதி ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து நேற்று இரவு அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அப்போது உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.