ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள்: குஷ்பு பேட்டி…

ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். சில நாட்களாக குஷ்பு விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

அவர் எங்கள் கட்சியில் இணைய முடிவு செய்தால் அதனை வரவேற்பேன்’ என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று குஷ்பு டெல்லி சென்றார். அப்போது இணையதளங்களில் பாஜகவில் இணைய உள்ளது தொடர்பாக கட்சி தலைமையிடம் பேச உள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவின.

இந்நிலையில் டெல்லி பயணம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; காங்கிரசில் நான் மகிழ்ச்சியாவே இருக்கிறேன்: எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு ட்வீட்டுக்கு ரூ.2 வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள். எனது டெல்லி பயணம் இவ்வளவு பெரிதாக்கப்படும் என தெரியாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; பெண்கள் மீதான குற்றங்களை எப்படி தடுக்க வேண்டும் என்பது பற்றித்தான் தற்போது சிந்திக்க வேண்டும். எந்த மாநிலமாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை தடுக்கப்பட வேண்டும்.

பிரியங்கா காந்தியின் சூர்தாவை பிடித்து போலீசார் இழுத்ததற்கு யாரும் மன்னிப்பு கேட்டார்களா ? உ.பி. பாலியல் வன்கொடுமை குறித்து மத்திய அரசு இதுவரை பேசவில்லை.

ஹத்ராஸ் கொடுமை குறித்து எந்த பெண் தலைவரும் பேசவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டிற்கே அமைச்சர் தானே; அவருக்கு வாழ்த்து சொல்லக் கூடாதா? நான் பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்வது புதிதல்ல.

ராகுல் காந்தியை கண்டு அஞ்சுவதால் தான், அவரை பாஜக அரசுகள் தடுத்து நிறுத்துகின்றன. ஆரோக்கியமான அரசியல் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

மக்களின் மனநிலையை ராகுல் பிரதிபலித்து வருகிறார் எனவும் கூறியுள்ளார்.