பிரதமர் மோடி வரும் ஏப்.27 ந்தேதி சீனா பயணம்..


பிரதமர் மோடி வரும் ஏப்.27 ந்தேதி சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்

சீனாவின் வுஹான் நகரில், பிரதமர் மோடியும், சீனா அதிபர் ஷி ஜிங்பிங்கும் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்து பேச உள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இரு அமைச்சர்களும் பத்திரிகையாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ கூறுகையில், அதிபர் ஷி ஜிங்பிங்கும், பிரதமர் மோடியும் ஏப்.,27 – 28 தேதியில் சீனாவின் வுஹான் நகரில் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்திப்பார்கள். சீனாவின் நடவடிக்கையில் சமூக நீதி புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது. வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இரு நாட்டு தலைவர்களும் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறோம். இதன் மூலம் இரு தரப்பு உறவில் புதிய மைல்கல்லை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேின்னர் சுஷ்மா கூறுகையில், சட்லஜ் மற்றும் பிரம்மபுத்ரா நதிகள் குறித்து தகவல் தர சீனா ஒப்புதல் அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்னை என்பதால் இதனை வரவேற்கிறோம். நதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரையை இந்த வருடம் துவங்கும். பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இரு நாட்டு தலைவர்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்திக்க ஆலோசனை நடத்தப்பட்டது. இரு தரப்பு உறவு மற்றும் சர்வதேச பிரச்னை தொடர்பாக இரு நாட்டு தலைவர்கள் கருத்துக்களை பரிமாறி கொள்ள சிறந்த தருணமாக இருக்கும். என்றார்.