பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்ஐஏ சோதனை..

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதமாற்றம் செய்ய வந்தவர்கள் என்று கூறி சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

தமிழக போலீசார் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து ராமலிங்கம் கொலை வழக்கை தேசிய புலனாய்வு துறை ஏடிஎஸ்பி சவுகத் அலி தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் என்ஐஏ குழுவினர் திருச்சி, பாலக்கரையில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில், அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் காரணமாக பாலக்கரை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ராமலிங்கம் கொலை சம்பவத்தின்போது, கொலையாளிகள் வந்து சென்ற கார் திருச்சி பகுதியை சேர்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதே போல் திருபுவனம் ராமலிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பாக, கும்பகோணத்தில் உள்ள பழைய மீன் அங்காடி அருகே உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்திலும், கே.எம்.எஸ் நகரில் உள்ள அப்துல் மஜீத் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் குத்தூஸ் என்பவரின் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்ற இந்த சோதனையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.