பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இன்றே இயக்குங்கள்: உயர்நீதிமன்றம்..


அரசுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சனையை பின்னர் பேசி தீர்க்கலாம், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்றே பேருந்துகளை இயக்குங்கள் என்று உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்த நிலையில், 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், வேலை நிறுத்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம் என்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது. ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொ.மு.ச வழக்கறிஞர் வாதிட்டார்.

ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சி.ஐ.டி.யு தெரிவித்தது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், 0.13 சதவிகித காரணிதான் பிரச்சனையாக உள்ளது என்பதை நீதிமன்றம் அறிகிறது. இந்த பிரச்சனையை பின்னர் விசாரிக்கலாம். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக்கொள்கிறோம்.

ஆனால், பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இன்றே இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.