பூரி ஜெகந்நாதர் ஆலய ரதயாத்திரை: நிபந்தனைகளுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி..

ஒடிசா மாநிலம் பூரியில் ஜகந்நாதர் ஆலய ரதயாத்திரையை சில நிபந்தனையுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் சமரசத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் பூரி ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரை நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஒடிஷா மாநில கடற்கரை நகரான பூரியில் புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் பாலபத்ரா, அவர் சகோதரர் ஜகந்நாதன் மற்றும் சகோதரி சுபத்ரா தேவி ஆகியோர் மூலவர்களாக உள்ளனர்.

இங்கு சுதர்சன சக்கரம் உள்ளது. மூன்று மூலவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் புது தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடப்பது வழக்கம்.

இந்த ரத யாத்திரை கோவிலில் இருந்து கிளம்பி 2 கிமீ தூரத்தில் உள்ள மவுசிமா என்னும் இவர்கள் அத்தை கோவில் வரை செல்லும். அங்கு 9 நாள் தங்கி இருந்து மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு ரதம் வந்து சேரும். அதன் பிறகு இந்த ரதங்கள் கலைக்கப்படும்.

சுமார் 14 அடி நீளம் உள்ள ஒவ்வொரு தேரும் தெருக்களில் செல்லும் போது மக்கள் மேள தாளங்கள், இசைக் கருவிகளுடன் ஊர்வலத்தில் கலந்துக் கொள்வார்கள்.

இந்த 10 நாள் உற்சவத்தை காண உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கானோர் இங்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை வரும் 23 ஆம் தேதி தொடங்க இருந்தது.

ஒரிசா விகாஸ் பரிஷத் என்னும் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பூரி ஜகந்நாதர் தேரோட்டம் நடக்கும் போது பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும், லட்சக்கணக்கானோர் கலந்துக் கொள்ளும் விழாவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது எனவும் தெரிவித்து.

இந்த விழாவுக்குத் தடை விதிக்க கோரிக்கை விடுத்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் தினீஷ் மகேஸ்வரி, போபண்ணா ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதில் தலைமை நீதிபதி தனது உத்தரவில், ”கொரோனா தொற்று தீவிரமாக உள்ளபோது இந்த ஆண்டு மக்கள் உடல்நலம் பாதுகாப்பு காரணமாகப் பூரி ஜகந்நாதர் தேரோட்டத்தை அனுமதிக்க முடியாது என முதலில் கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.