ரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த விவரங்களை 14 பக்க அறிக்கையை மத்திய அரசு பொதுவெளியில் இன்று வெளியிட்டது.

இதில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் விதிமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்று மத்தியஅரசு தெரிவித்தள்ளது.

பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தில் விமானத்தின் உதிரிப்பாகங்கள் தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்த வழங்கப்பட்டதிலும்,

காங்கிரஸ் நிர்ணயித்த முந்தைய விலையைக் காட்டிலும் அதிகமான விலையில் ஒப்பந்தம் செய்து ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

ஆதலால், ரஃபேல் விமானங்கள் கொள்முதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முதன்முதலில் வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா, வினித் டண்டா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்யின் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் ஆகியோர் கூட்டாக மனுச் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களுக்கு ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் பின்பற்றப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த விவரங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தவிவரங்களை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடந்த மாதம் 31-ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், ரஃபேல் போர் விமானங்கள் குறித்த விலையை குறிப்பிட்டு சீல்வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரஃபேல் போர்விமானக் கொள்முதலில் பின்பற்றப்பட்ட கொள்கை விவரங்களை 14 பக்கங்களில் பொதுவெளியில் வெளியிட்டு, மனுதாரர்களுக்கு வழங்கியது. அதில், அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது

1. பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர்விமானங்களைக் கொள்முதல் செய்ததில் விதிமுறைகள் அனைத்தும் முறையாகவே பின்பற்றப்பட்டுள்ளன.

2. பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதல் பெறப்பட்டபின்புதான் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது.

3. கடந்த 2013-ம் ஆண்டு பாதுகாப்புத்துறை தளவாடங்கள் கொள்முதல் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பிரான்ஸ், இந்தியா இடையே பேச்சுவார்த்தை முடிந்தபின், கடந்த 2016, ஆகஸ்ட் 24-ம் தேதி ஒப்பந்தத்துக்குப் பாதுகாப்புத்துறையின் அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

4. ஏறக்குறைய ஒரு ஆண்டுவரை பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்திய அதிகாரிகள் குழுவினர் பேச்சு நடத்தினார்கள்.

அதன்பின், பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் கூட்டம், நிதி ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெற்றபின் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.