ராகுல் ஜோக்கரை போல் பேசுகிறார் : பரப்புரையில் சந்திரசேகர ராவ் கிண்டல்..

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ், தலைவர் ராகுல் ஜோக்கரை போல் பேசுகிறார் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் இந்த மாதம் நடைபெற உள்ளது.

இதற்காக சமீபத்தில் பரப்புரை கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் ராகுல், சந்திரசேகர ராவ் தெலுங்கானா வளர்ச்சி திட்ட நிதியை கொண்டு தனது குடும்பத்தை பணக்கார குடும்பமாக்க பார்க்கிறார் என குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு இல்லண்டு பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் நேற்று பேசிய சந்திரசேகர ராவ் பதிலளித்ததுடன், ராகுலை கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

சந்திரசேகர ராவ் பேசுகையில்; ராகுலுக்கு கடவுள் அறிவை கொடுத்திருக்கிறாரா இல்லையா. அவர் ஜோக்கரை போல் பேசுகிறார்.

நாங்கள் கமிஷனுக்காக நீர்பாசன திட்டங்களை மாற்றி அமைத்ததாக கூறுகிறார் ராகுல். உங்களுக்கு துணிவிருந்தால் ருத்ரமாகோட்டாவுக்கு சென்று பாருங்கள்.

அங்கு உங்கள் அப்பாவிற்கு பிறகு ராஜிவ் சாகர், இந்திரா சாகர் என ஏதாவது இருக்கிறதா என பார்ப்போமா. நான் உங்களை அங்கு அழைத்துச் செல்லட்டுமா. தேவையற்ற வெற்று வார்த்தைகளை பேசாதீர்கள்.

நாங்கள் திட்டங்களை தான் வகுத்து வருகிறோம். நாங்கள் உங்களைப் போன்று கமிஷனுக்காக வாழவில்லை.

எங்களின் வாழ்க்கை போராட்டகரமானது. நீங்கள் விரும்பினால் நாங்கள் வேண்டுமானால் உங்களுக்கு கமிஷன் தருகிறோம் என்றார்.