ராகுல் காந்தி – பா.இரஞ்சித் திடீர் சந்திப்பு…


இயக்குநர் பா.இரஞ்சித்துடன் அரசியல், சமூகம், திரைப்படம் குறித்துப் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா. இரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”கபாலி, மெட்ராஸ், காலா போன்ற மாபெரும் வெற்றி படங்களின் பின்னால் இருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்தையும், நடிகர் கலையரசனையும் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தேன்.

அரசியல், திரைப்படம், சமூகம் குறித்து நாங்கள் பேசினோம். அவர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது. எதிர்காலத்திலும் இது போன்ற உரையாடல்கள் தொடரும் என்று எதிர்நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் பா. இரஞ்சித் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு, ”மதச்சார்பற்ற அரசியலமைப்புக்கு சாதி மற்றும் மதம் ஆகியவை எத்தகைய அச்சுறுத்தல்களைத் தருகிறது என்பதை பற்றி பேசினோம்.

நமது உரையாடல்கள் முழு வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு தேசியத் தலைவர் அனைத்து தரப்பு மக்களின் சித்தாத்தங்களுடன் தொடர்பில் இருப்பது உற்சாகம் அளிக்கிறது” என்று தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.