சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் தொடக்கம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. மேலும் சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் துவங்கலாம் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. அதன்படி இன்று 10 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் இனி சவுதி அரேபியா சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்காக அனுமதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.