ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

நாளைய தினம் விசாரணை துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் சூரப்பாவை காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணியிடைநீக்கம் செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை 9 மாதங்களுக்கு மேல் அரசு நிலுவையில் வைத்திருந்ததது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், சூரப்பாவை பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது கேலிக்கூத்து என்றும், கண்துடைப்பு நாடகம் என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார்.

80 கோடி ரூபாய் லஞ்சம் வசூல் செய்து விட்டார்கள் என்று அரசு ஆணையில் குற்றம் சாட்டியும், இதுநாள் வரை துணைவேந்தரையும், துணை இயக்குநரையும் சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது திரைமறைவில் என்ன பேரம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நாளைய தினம் விசாரணை துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் சூரப்பாவை காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின், இதுவே, நேர்மையான – நியாயமான விசாரணைக்கு வழி விடும் என்று குறிப்பிட்டுள்ளார். ஊழல் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டுவிடாமல் இருக்க உடனடியாக அவை அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.