ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன் மறைவு….

மருத்துவம் என்பது தெய்வத் தொழிலாகும்.அதை தெய்வத் தொழிலாக சில மருத்துவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர்தான் ஏழைகளின் மருத்துவர் ஜகன்மோகன்.

சென்னை மந்தைவெளியில் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த 20 ரூபாய் மருத்துவர் ஜகன் மோகன் காலமனார். அவருக்கு வயது 78.

சென்னை மந்தைவெளி பகுதியில் சந்திரா கிளினிக் என்ற பெயரில் சிறிய மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் ஜகன் மோகன் ஏழைகளின் மருத்துவராகவே வாழ்ந்து வந்தார்.

மருத்துவத்தை ஒரு சேவையாகவே தொடங்கிய அவர் 1975 ஆம் ஆண்டு மருத்துவத்திற்காக முதன் முதலில் அவர் பெற்ற கட்டணம் 2 ரூபாய் மட்டுமே.

அன்று தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்த்த அவர் கடைசியாக ஒரு நோயாளியிடம் பெற்ற கட்டணம் வெறும் 20 ரூபாய் தான்.

இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு காலமானார்.

78 வயதில் காலமான அவரது உடலுக்கு சென்னை மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களின் நலனுக்காக மருத்துவம் பார்த்த மருத்துவர் ஜகன் மோகன் மறைந்தாலும் அப்பகுதி ஏழை மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.