தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் : மு.க.ஸ்டாலின்

விரைவில் தமிழகமே குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்டங்களின் நிலை என்ன என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2019-ஆம் ஆண்டில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் மிக கடுமையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

சென்னையில் மழையளவு 55 சதவீதம் குறைந்து விட்டதால் குடிநீருக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் மட்டம் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறினார்.

20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் படு மோசமாக குறைந்து விட்டதாக ஆய்வு முடிவுகள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

நிதி நிலை அறிக்கைககளில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதையும்

சென்னை மற்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 9 ஆயிரத்து 692 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

மேலும் குடிநீர் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிட அவர் வலியுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநிலம் முழுதும் 1 லட்சத்து 23 ஆயிரம் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2019-ஆம் ஆண்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு 122 கோடி ரூபாயும் வடிகால் வாரியத்திற்கு 36 கோடி ரூபயும் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர்,

டிசம்பர் மதம் வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.