பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியதை வரவேற்பதாக திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வரும் டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்த வரையில், ஆளும் ராஸ்டிர சமதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பாஜக கட்சிக்கு ஆதரவாக உள்ளார்.

இதனால், அவரை வீழ்த்துவதற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இதற்காக நேற்று டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சு வார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், பாஜக கட்சியை வீழ்த்துவதே எங்களின் நோக்கம் எனவும், அதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறினர்.