சென்னையில் குடியேற விருப்பம் : தஹில் ரமானி

மும்பையில் இருப்பதை விட சென்னையில் குடியேறுவதையே விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், கலந்து கொண்டு பேசிய அவர், பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

மும்பையை ஒப்பிடும் போது தட்பவெப்ப நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சென்னையிலேயே குடியுயேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாகவும் தஹில் ரமானி குறிப்பிட்டார்.

கடந்த ஓராண்டில் 5 ஆயிரத்து 040 வழக்குகளை முடித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், எம்.எஸ்.ரமேஷ், ஜெயசந்திரன், தண்டபாணி, பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.