சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு 22-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..


சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு வரும் 22-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ. 13.50-லிருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பது தான் பொது விநியோகத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கம். இன்று தமிழகத்தில் பட்டினி சாவுகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது என்றால் திமுக ஆட்சியில் தலைவர் கருணாநிதி அமல்படுத்திய ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் என்பதை நாடே அறியும். இதனால்தான் உச்ச நீதிமன்றமே திமுக செயல்படுத்திய பொது விநியோகத் திட்டத்தை பாராட்டியது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு திமுக முதலில் எதிர்ப்பதாகவே முடிவு எடுத்தது. பிறகு தலைவர் கருணாநிதிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், ‘சட்டம் இயற்றப்படுவதால் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடுகள் குறைக்கப்படாது. குறிப்பாக அதே விலையில் வழங்கப்படும்’ என்று தலைவர் கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியதோடு மட்டுமின்றி, நாடாளுமன்றத்திலும் அந்த உறுதிமொழியை அளித்தார். இந்த உறுதிமொழிக்குப் பிறகுதான் திமுக உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை ஆதரித்தது.
நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரை காப்பாற்றியது என்பதை அதிமுக அமைச்சர்களால் புரிந்து கொள்ள முடியாது. தற்போதைய மத்திய பாஜக அரசின் கட்டளைக்கு பணிந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த ஒப்புக் கொண்ட அதிமுக அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாடாளுமன்றத்தில் மத்திய உணவு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி, தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது.
கடமையைச் செய்யத் தவறி, பொது விநியோகத்திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் மானியங்களை எல்லாம் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு இன்றைக்கு திடீரென்று சர்க்கரை விலையை இரு மடங்கு உயர்த்தி, அப்பாவி மக்களுக்கு தாங்க முடியாத பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு அஞ்சி நடுங்கி ஏற்கெனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, நீட் தேர்வு போன்றவற்றால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை எப்படி தட்டிக் கேட்காமல் அமைதி காத்ததோ அதே போல் இப்போது சர்க்கரை மானியம் ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம் முறையிடவே இல்லை.
மத்திய நிதிநிலை அறிக்கையில் சர்க்கரை மானியத்திற்காக சென்ற வருடம் நிதி ஒதுக்காத போதும் உணவுத்துறை அமைச்சரோ, முதல்வரோ வாய் திறக்கவில்லை. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு கையெழுத்து போட்ட அதிமுக அரசு பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசு மானியத்தை விட்டுக் கொடுக்க மனப்பூர்வமாக சம்மதித்து விட்டது என்பதுதான் உண்மை. அதனால்தான் இன்றைக்கு சர்க்கரை விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. நாளடைவில் பொது விநியோகத் திட்டத்தையே ரத்து செய்வதற்கு கூட அதிமுக அரசு சம்மதித்து அனைத்து தரப்பு மக்களையும் இருட்டில் தள்ள தயங்காது என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விலை உயர்வை அறிவித்துள்ள அதிமுக அரசை கண்டித்தும், பொது விநியோகத் திட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் ரத்து செய்யும் போக்கை மத்தியில் உள்ள பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு; கடும் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற நவ.22-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் திமுக சார்பில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நடைபெறும்.
மாவட்ட – மாநகர – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகர் அணி, சிறுபான்மை நலஉரிமை பிரிவு உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து, ஆங்காங்கே உள்ள மக்களை அரவணைத்துக் கொண்டு இந்த கண்டன ஆர்பாட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.