தமிழகத்தில் மேலும் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.

58,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,849 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5,775, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 74 பேர் உட்பட 4,849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து மேலும் 4,910 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,673 ல் இருந்து 1,31,563 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 50 பேர், தனியார் மருத்துவமனைகளில் 24 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். வேறுநோய் பாதிப்பு இல்லாத 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வேறு காரணங்களுக்காக மரணித்தவர்கள் என சொல்லப்பட்ட 444 உயிரிழப்புகள் கரோனாவால் இறந்ததாக அறிவித்தார்.

மருத்துவர் வடிவேல் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மார்ச் 1 முதல் ஜுன் 10 வரை விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444ஆக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆதலால் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் 444 மரணங்கள் சேர்க்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதன் மூலம் இன்று 74 பேர் உயிரிழந்த நிலையில் விடுபட்ட 444 மரணங்கள் கொரோனா இறப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 53வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா உயிரிழப்பு 1,939 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவிற்கு இதுவரை 1,205 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 210, திருவள்ளுரில் 180 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று மேலும் 1,171 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 88,368 லிருந்து 89,561 ஆக அதிகரித்துள்ளது..

சென்னையில் 19வது நாளாக 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.