தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா: பாதிப்பு 911 ஆக உயர்வு…

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏற்கெனவே 738 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், நேற்று(வியாழக்கிழமை) புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்,

‘தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் இன்று ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9 ஆகவும் அதேநேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆகவும் உயர்ந்துள்ளது’ என்றார்.

மேலும் பேசிய அவர், ‘தமிழகத்தில் சமூக பரவல் இருக்கிறதா என்பதை அறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட 71 பேருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. ஆனால், கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மூலமாக சமீபத்தில் 72 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சமூகப் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கை தற்பொழுது நீக்க வேண்டாம் என்ற வல்லுநர் குழுவின் ஆலோசனையை முதல்வர் பரிசீலித்து வருகிறார். நாளை பிரதமர் உடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்வார்.

30 நிமிடத்தில் கரோனா தொற்றை உறுதி செய்யும் ரேபிட் கிட்ஸ் கருவி இன்னும் வரவில்லை. மத்திய அரசே கொள்முதல் செய்து பிரித்து வழங்கும் என்பதால் இன்னும் நமக்கு ரேபிட் கிட்ஸ் வரவில்லை.

தமிழகம் 2 ஆவது கட்டத்திலேயே உள்ளது. சமூகப் பரவல் நிலையை தமிழகம் இன்னும் எட்டவில்லை’ என்று தெரிவித்தார்.