தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் :ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்..

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டப்பேரவை நிறைவடைந்து 16-வது சட்டப்பேரவை அமைந்துள்ளது. 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் 21-ந்தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு கடந்த 9-ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சட்டப்பேரவை மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள்.
காலை 10 மணிக்கு கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். தொடர்ந்து, ஆளுநர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவடையும்.

அதன்பின், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவைக்கு வரும் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்ள்,அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருமே கரோனா பரிசோதனை செய்த பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவையின் இருக்கைகள், சமூக இடைவெளியுடன் போடப்பட்டுள்ளன. அதோடு கரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சட்டப்பேரவையில் கடைப்பிடிக்கப்படும்.