தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது : மதுரையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை..

தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது என்றும், சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை வண்டியூரில் திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாதான் நடந்துள்ளது,

இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் இதுபோல வெறும் அறிவிப்புகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட உருவாகும் சூழல் ஏற்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மதுரை உட்பட தமிழகத்தின் நகரங்களுக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கும் விடை இல்லை என அவர் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு பற்றி கேட்டால் பக்கோடா விற்கலாமே என கேட்கும் அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாகக் கூறிய மு.க.ஸ்டாலின் கவிதை ஒன்றையும் வாசித்தார்.

தமிழகத்தில் பேயாட்சி நடைபெறுவதாகவும், சட்டம் ஒழுங்கு நிலைமையோ மோசமாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் சாடினார்.

கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மிகப்பெரிய கொடுமை என்றும்,

தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இதுவே சான்று என்றும் அவர் கூறினார்.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் மூலம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிவராது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த உண்மை வெளிக்கொண்டுவரப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கவிதை வாசித்தார் ஸ்டாலின்.

”மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை சுருக்கமாகக் கவிதை வடிவில் எழுதி நண்பர் ஒருவர் எனக்கு வாட்ஸ் அப் செய்திருந்தார். அது இந்தக் கவிதைதான்…

இது பொல்லாத ஆட்சி, அதற்கு பொள்ளாச்சியே சாட்சி

இது துப்புக்கெட்ட ஆட்சி, அதற்கு தூத்துக்குடியே சாட்சி

இது தரிசாக்கும் ஆட்சி, அதற்கு நெடுவாசலே சாட்சி

இது மனுதர்ம ஆட்சி, அதற்கு நீட் தேர்வே சாட்சி

இது பாலைவன ஆட்சி, அதற்கு மேகதாதுவே சாட்சி

இது ஊழல் ஆட்சி, அதற்கு ரஃபேலே சாட்சி

இது நாணயங்கெட்ட ஆட்சி, அதற்கு செல்லாத நோட்டே சாட்சி

இது கொள்ளைக்கார ஆட்சி, அதற்கு ஜிஎஸ்டியே சாட்சி

இது மதவெறி ஆட்சி, அதற்கு மாட்டுக்கறியே சாட்சி

இது கொலைகார ஆட்சி, அதற்கு கொடநாடே சாட்சி

இது வாயில் வடைசுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி

இது எடுபிடி ஆட்சி, அதற்கு எடப்பாடியே சாட்சி என்று நண்பர் எழுதியிருக்கிறார்” என்றார் ஸ்டாலின்.

ஜாடிக்கேற்ற மூடியாகவும் மூடிக்கேற்ற ஜாடியாக மோடியும் எடப்பாடியும் இருக்கின்றனர் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்