தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்து: புறக்கணிப்பதாக காங்., மதிமுக, கம்யூ. விசிக கட்சிகள் அறிவிப்பு..

தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்த குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்,விசிக கட்சிகள் அறிவித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆளுநரின் செயல்பாடுகள் சட்டத்துக்கு புறம்பானவையாக உள்ளதால் அவரது அழைப்பை புறக்கணிக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
குடியரசு நாளில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்தில், விசிகவைச் சேர்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இந்திய குடியரசு தினத்தையொட்டி நாளை (26.01.2023) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கடந்த 23.01.2023 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுக்கிறார்.

ஆர்எஸ்எஸ் கொள்கைளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படும் இவர் திருந்துவதற்கு வாய்ப்பேதுமில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாசிச பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலாவது ஆளுரின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.