தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க குழு : இரு மாநில முதல்வர்கள் முடிவு..

தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை தீர்க்க,

இருமாநிலங்களை சேர்ந்த தலா 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று

முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை பேசி தீர்க்க இரு மாநில அரசுகள் தரப்பிலும் முடிவு செய்யப்பட்டதை அடுத்து,

பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு காலை புறப்பட்டுச் சென்றார்.

திருவனந்தபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் தங்கியிருந்த மஸ்கட் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்தார்.

அப்போது மலர் கொத்தும், சால்வையும் போர்த்தி வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து இருதரப்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் செயலாளர் சாய்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

கேரளா மாநில அரசு சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, மின்சாரத்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜு ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கும் விவகாரம், பரம்பிக்குளம் -ஆழியாறு மற்றும் பாண்டியாறு – புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக்கு பின்னர் இருமாநில முதலமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பரம்பிக்குளம் – ஆழியாறு நீர்பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேச இரு மாநிலங்களைச் சேர்ந்த தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார்.

முன்னதாக பேசிய கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், இரு மாநில குழுவின் செயல்பாடுகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் ஆய்வு செய்வார்கள் என்றார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழு மூலம் இரு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய கேரளா முதல்வர் உம்மன்சாண்டியை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில்,

மீண்டும் இரு மாநில முதலமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.