தமிழ்நாடு,கேரளா, மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் : விரைவில் மத்திய பாஜக அரசை வீழ்த்தும் : ப.சிதம்பரம்..

காரைக்குடியில் முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். உடன் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி

தமிழ்நாடு,கேரளா, மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் விரைவில் மத்திய பாஜக அரசை வீழ்த்தும் என முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காரைக்குடி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியுடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் ப.சிதம்பரம்.

அப்போது அவர் தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக -காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.தமிழக தேர்தலில் 18 தொகுதிகளை வென்று காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. 25 தொகுதிகளையும் வெல்ல ஆசைப்பட்டோம் ஆனால் 18-ல் வென்றுள்ளோம்.

காரைக்குடியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வெற்றி சான்றிதழுடன் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்


அசாம் மாநிலத்தில் வெறும் 1 சதவிகித வாக்கு வித்தியாசம் தான் காங்கிரஸ் கடந்த முறையை விட அதிக தொகுதிகளை வென்றுள்ளது. அதுபோல் கேரளாவில் மாற்றம் நிகழவில்லை யென்றாலும் தனது அசுர பலத்துடன் வந்த பாஜகவை விரட்டியுள்ளனர் அம்மக்கள்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையத்தை துணைக்கு அழைத்துக் கொண்டதுடன் பல வழிகளில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி செய்தது. திரிமுணால் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியது. கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் ஆக்ஸிசன் சிலிண்டருக்கு அல்லாடிக் கொண்டிருக்கையில் பிரதமரும்,உள்துறை அமைச்சரும் பிரச்சாரத்தில் இருந்தனர். இவையனைத்தையும் மீறி மம்தா தைரியத்துடன் எதிர்த்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

பாண்டிச்சேரி பற்றி பேச ஒன்றுமில்லை கடந்த காங்கிரஸ் ஆட்சியை செயல்படவிடாமல் கடைசி நேரத்தில் கவிழ்த்து நடந்ததெல்லாம் அனைவரும் அறிவோம்.

தமிழகத்தில் மத்திய அரசும்,மாநில அரசும் அதிகாரம்,பண பலத்தால் தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை,கொடுப்பதற்கும் காங்கிரஸிடம் பணமில்லை. மக்கள் பணம் கொடுப்பவர்களைப் புறக்கணித்து 18 காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றார்.

வென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களை சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.தொகுதி மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருத்தல் அவசியம் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி குறித்த கேள்விக்கு அது அதிமுக உட்கட்சி விவகாரம் என்றார்.

தமிழகத்தில் பாஜக கால்லுான்ற விடக்கூடாது என நினைத்தோம் ஆனால் 4 தொகுதிகளை வென்றுள்ளனர். கொங்கு குறிப்பாக கோவைப்பகுதியில் உள்ள மக்கள் தன் சமுதாயம் சார்ந்து வாக்களித்துள்ளனர். முன்பெல்லாம் அந்த பகுதியில் பலமாக இருந்தோம்.. தற்போது இல்லை ஆனால் நாம் மீண்டும் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவோம் என்றார்.

தமிழ்நாடு,கேரளா மேற்கு வங்களா வெற்றி இந்தியா முழுமைக்கும் பரவும்,விரைவில் மத்திய பாஜக அரசை ஒன்றிணைந்து வீழ்த்துவோம் என்றார்.

பேட்டியின் போது சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்