தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடையும்: வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில், 6-ம் தேதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 6 முதல் 8-ம் தேதி வரை கடக்கக்கூடும். அதன் காரணமாக இந்நாட்களில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.

எனவே ஆழ்கடலில் மீன் பிடிப்புக்குச் சென்றுள்ள மீனவர்கள், 6-ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாலும், தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியாலும்,

நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.