தொடர் மழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (வியாழன்) விடுமுறை

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை நவ.,22) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (நவ-22) நடைபெற இருந்த சென்னை பல்கலை., தேர்வுகள் வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகதுணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செவ்வாய்க் கிழமை இரவு முதல் தொடர்ந்து சீரான மழைப் பொழிவு காணப்படுகிறது. இதனால், வியாழக்கிழமை சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் செவ்வாய்க் கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.