விநாயகர் சிலை விவகாரம் : பாஜக கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர் பழனிசாமி…

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கிடையே, கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ,

விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட தமிழக அரசு அறிவித்தது.

இருப்பினும்,விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

பாஜக மாநில தலைவர் முருகனும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிகை விடுத்தார்.

இதற்கிடையே, இந்து முன்னணியினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழி படுவோம் என்று தெரிவித்துள்ளனர். அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.

தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நேற்று விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு ஏற்கனவே விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும்,

பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது