விருதுநகர் ரத்த வங்கிகளில் உள்ள ரத்த மாதிரிகளை மறுபரிசோதனை செய்ய உத்தரவு..

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த மாதிரிகள் மறுபரிசோதனை செய்யப்படும் எனவும் அது முடிந்த பிறகே மீண்டும் ரத்த விநியோக தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ரத்தவங்கிகளில் உள்ள ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த பின்னரே ரத்த விநியோகம் தொடங்கும் என சுகாதார இணை இயக்குநர் மனோகரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

சிவகாசியை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல்திறன் பரிசோதனை செய்த போது அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

அதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது அந்த நபர் 2 வாரங்களுக்கு முன்னதாக சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்ததாக தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, அவரது ரத்தம் சாத்துரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே கர்ப்பிணி பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து பார்த்த போது, அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் ரத்த வங்கி ஊழியர் வங்கி ஒப்பந்த தொழில்நுட்பவியலாளர் வளர்மதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தகவல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மேல்சிகிச்சை, இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும் அவர், ரத்த பரிசோதனை செய்யப்பட்ட உபகரணங்கள் சோதனை செய்யபப்ட்டு வருவதாகவும்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல ஊழியர்களிடம் விசாரனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போது பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லாமல் குழந்தை பிறக்க விருதுநகர் அரசு மருத்துவமனையில் கூட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தை மறு பரிசோதனை செய்யப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய விருதுநகர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மனோகரன், விருதுநகரை சேர்ந்த 4 ரத்த வங்கிகள், 7 ரத்த சேமிப்பு நிலையங்கள், 3 தனியார் ரத்த வங்கிகளில் உள்ள ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட அந்த 14 வங்கிகள் ரத்த விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், முழு ஆய்வுக்கு பிறகு அனைவருக்கு சீராக ரத்தம் வழங்கப்படும் எனவும்,

விருந்துநகர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மனோகரன் தகவல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன,

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.