நாம் கனவு கண்ட இந்தியாவா இது?; ராகுல் காந்தி கேள்வி…

உத்திரபிரதேச மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல் காந்தி , இதுதான், நாம் கனவு கண்ட இந்தியாவா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் அமைந்துள்ள சித்ரகூட் பகுதியில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கான சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சுரங்கங்களில் பணிபுரியும் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

சுரங்கங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான பலர், இந்த செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்., எம்பி ராகுல் காந்தி மேலும் பதிவிட்டுள்ளதாவது:

கரோனா பரவலை தடுக்க, திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள், பட்டினியில் சிக்கி தவிக்கின்றன. உ.பி., மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உள்ளனர். இது தான், நாம் கனவு கண்ட இந்தியாவா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.