உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்; நம்பிக்கையை உருவாக்குவோம்: மு.க ஸ்டாலின்..

புற்றுநோயைக் குணப்படுத்த முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என மருத்துவத் துறையினர் தரும் நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 04), உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
உலகப் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்!

மனித குலத்தை அச்சுறுத்தும் அனைத்து ஆபத்துகளையும் அறிவியல் மனப்பான்மையாலும் மானுட நேயத்தாலும் வென்று வந்திருக்கிறது உலகம். புற்றுநோயை எதிர்கொண்டு வெல்வதிலும் மருத்துவத் துறை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. புற்றுநோயால் 52 ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரி 3-ல் அண்ணாவை இழந்தோம்.

அரை நூற்றாண்டு கடந்த நிலையில், புற்றுநோயை வென்ற மனிதர்களை முன்னிறுத்தி விழிப்புணர்வினை ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ல் கடைப்பிடிக்கிறோம்.

உயிர் காக்கும் மருத்துவப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவர் சாந்தா உள்ளிட்ட உலகளாவிய மருத்துவர்களைப் போற்றுவோம்.

புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் – வராமல் தடுக்கவும் முடியும் என மருத்துவத் துறையினர் தரும் நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவோம்”.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.