உலகை வெல்லும் இளைய தமிழகம் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த இனிய காலை வேளையில், உங்களை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு உற்சாகமாக இருக்கிறது!
கடந்த ஐந்தாறு நாட்களாக எனக்கு காய்ச்சல் ஏற்பட்டு, அதனால் உடல் சோர்வான நிலையில் இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி அந்த சோர்வுகள் எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் பெறக்கூடிய நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். கள்ளம் கபடம் இல்லாத உங்கள் முகங்களில் இருக்கும் இந்த இயல்பான அழகுதான் இனிமையான அனுபவத்தைத் தருகிறது!
இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடவில்லை; உங்களையெல்லாம் என்னுடைய சொந்தப் பிள்ளைகள் என்று கருதி அந்த உணர்வோடு உங்களை நான் வாழ்த்த வந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கையில், பள்ளிக் கல்வி என்ற ஒரு படியைத் தாண்டி, கல்லூரிக் கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த மாநிலத்தின் அறிவுச் சொத்துக்கள்! உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு, பரந்த எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம்தான், ‘நான் முதல்வன்’ என்கிற இந்தத் திட்டம்! அதன் ஓர் அங்கமாகத்தான் இந்த ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பை முடித்தோம் – கல்லூரியில் சேர்ந்தோம் – பட்டம் வாங்கினோம் – வேலையில் சேர்ந்தோம் – கைநிறைய சம்பளம் வாங்கினோம் – என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை. எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம். இதுதான், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் உண்மையான நோக்கம்!

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன் – மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் – மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன் – என்று பெயர் எடுப்பது மட்டுமல்ல கல்வித் திறனில் முதல்வன் – அறிவாற்றலில் முதல்வன் – படைப்புத் திறனில் முதல்வன் – பன்முக ஆற்றலில் முதல்வன் – ஒருவரை மதிக்கத் தெரிந்தவன் – சமத்துவமாக நடக்கத் தெரிந்தவன் – அனைவரும் பின்பற்றும் பண்பாட்டு அடையாளம் கொண்டவன் – அனைவரையும் வழிநடத்தும் தலைமைத் திறன் பெற்றவன் – என்று தமிழ்நாட்டு இளைஞர்களை, மாணவர்களை உயர்த்தும் திட்டம்தான் இந்த நான் முதல்வன் என்கிற திட்டம்! அந்த இலக்கை அடையவே இந்தக் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நாம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறோம்.
பொறியியல், மருத்துவம் என்பது மிகச் சிறந்த படிப்புகள்தான். ஆனால், அந்த இரண்டு கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம். இன்று வாய்ப்புகள் எல்லாத் துறைகளிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் படித்து முன்னேறி, உழைப்பைக் கொடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன.

ஆகவே, கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அந்தந்தத் துறையில் மிகச்சிறந்த வல்லுநர்கள் ஆவதற்கு, கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடப்பிரிவுகள் குறித்தான ஒரு வழிகாட்டி நிகழ்ச்சிதான் இது. பல திறன்கள், தனித்திறன்கள் கொண்டிருக்கக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதே நம் நோக்கம்.

இந்த ‘நான் முதல்வன் – கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியானது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் நடக்கப் போகிறது. தமிழகத்தில் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளாக 100 கல்லூரிகளைத் தேர்வு செய்தால், அதில் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்று நான் இங்கு பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.
எனவே கல்லூரிப் பட்டம் என்பதை எளிதாக அனைவரும் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், அந்தப் பட்டத்தைத் தாண்டிய தனித்திறமை இருந்தால்தான் நீங்கள் தனித்து ஜொலிக்க முடியும், பிரகாசிக்க முடியும். அதற்கு தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் முடியும் என்ற தைரியம் வேண்டும். நல்ல மொழியாற்றல் வேண்டும்.

தமிழ் மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய தாய்மொழியான தமிழிலும் உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்திலும் எழுத, பேச, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அது பகுத்தறிவாக இருக்கவேண்டும் என்பது தான் மிக மிக முக்கியம், அதை மறந்துவிடக் கூடாது.

விரக்தி மனோபாவம் என்பது ஒருபோதும் இருக்கக்கூடாது. உங்களோடு மற்றவர்களை ஒப்பீடு செய்யாதீர்கள். இந்தப் பண்புநலன்கள் எல்லாம் ஒருவருக்கு நல்ல கல்வியால்தான் அமைந்திட முடியும். அத்தகைய கல்வியை, உயர்கல்வியைப் பெற வழிகாட்டியாக இருக்கப்போவதுதான், இந்தக் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி’!” எனத் தெரிவித்துள்ளார்.