அமமுகவில் இருந்து விலகிய வி.பி.கலைராஜன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அமமுகவில் இருந்து வி.பி. கலைராஜன் நீக்கப்பட்டார். இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திருச்சியில் தங்கி உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வி.பி.கலைராஜன் தி.மு.கவில் இணைந்தார்.

பின்னர் பேசிய வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் சுட்டு விரல் காட்டினால், சிட்டாக பறந்து வேலை பார்ப்பேன் எனக் கூறினார். தமிழனத்தை காக்கும் துணிச்சல் மிக்க தலைவர் ஸ்டாலின் என்பதால் திமுகவில் இணைந்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் பலர் திமுகவில் இணைய உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை அடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், எந்தக் கட்சியையும் தாங்கள் சவாலாக கருதவில்லை என்றார். இன்னும் பல கட்சிகளில் இருந்து பலர் திமுகவில் இணைவார்கள் எனத் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில், டிடிவி தினகரன் முகாமில் இருந்து முக்கியமான தலைவர்கள் அடுத்தடுத்து விலகுவது, அவருக்கு மிகவும் பலவீனத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.