இரட்டை இலைக்கு லஞ்சம்: டி.டி.வி தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்


இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இவ்வழக்கில் கடந்த ஜூலை மாதம் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் துணை குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர். அதில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா உள்ளிட்ட ஐந்து பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.