ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். இவர்  ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில்  115 கிலோ தூக்கி அசத்தினார். இதன்மூலம் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். சீனாவின் ஹோ சிஹாய் தங்கப்பதக்கத்தை வென்றார். 


கர்ணம் மல்லேஸ்வரி 2000ஆம் ஆண்டு 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் 21ஆண்டுகளுக்கு மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவை பலரும். பாராட்டி வருகின்றனர். இந்தப் போட்டியில் ஸ்நாட்ச் பிரிவில் மீராபாய் சானு 90 கிலோவிற்கு மேல் தூக்கி இருந்தால் தங்கப்பதக்கம் அவருக்கு நிச்சயமாக கிடைத்திருக்கும். எனினும் அவர் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதகக்த்தை உறுதி செய்துள்ளார். 


ஏற்கெனவே இந்தாண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையை தூக்கி இவர் உலக சாதனைப் படைத்திருந்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இவர் பதக்கம் வெல்லுவார் என்ற நம்பிக்கை இருந்தது. இதை தற்போது மீராபாய் சானு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க பட்டியல் கணக்கையும் மீராபாய் சானு துவக்கி வைத்துள்ளார். 

வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு பிரதமர் மோடி,  முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.