பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு போராட்டம்: தற்காலிகமாக வாபஸ்: 13 கிராம மக்கள் முடிவு..

சென்னை அருகே பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், கொடவூர், மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் விமான நிலையம் அமைகிறது. புதிய விமான நிலையத்துக்காக 4,791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் 2,605 ஏக்கர் நஞ்சை நிலமாகும். இப்பகுதிகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இங்கு விமான நிலையம் அமைந்தால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், இப்பகுதி மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 80 நாட்களுக்கு மேல் இந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 13 கிராமங்களைச் சேர்ந்த பிரநிதிகளுடன் அமைச்சர்கள். ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.