பெரியார் பெயர் மாற்றம் தொடர்ந்து அண்ணா, காமராஜர் சாலை பெயர் மாற்றம் கண்டிக்கத்தக்கது: டிடிவி தினகரன்..

சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அண்ணா, காமராஜர் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரும் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குச் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்?
உடனடியாக இந்த உத்தரவுகளை திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என்று குற்பிட்டுள்ளார்.