மனதைப் பிழியும் சோகம்: குரங்கணி தீ விபத்து குறித்து கமல் ட்விட்டரில் பதிவு..


குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். இதில் முதல்கட்டமாக 22 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) காலை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “குரங்கணி. விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.