மருத்துவ மாணவர் தற்கொலை: விசாரணை ஆணையம் அமைக்க ஸ்டாலின் கோரிக்கை..


வட மாநிலங்களில் தமிழக மாணவர்கள் மரணம் குறித்து தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 24 வயது மாணவர் கிருஷ்ணபிரசாத் சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் நேற்று காலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்காக தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். சண்டிகர் மருத்துவ கல்லூரியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணபிரசாத் மரணத்திற்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வேறு மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களை இழப்பதற்கு இனியும் தமிழகம் தயாராக இல்லை என்பதை அரசுகள் உணர வேண்டும் என்று அவர் கூறினார்.