லடாக் எல்லையில் சீனா ஊடுருவவில்லை என்றால்; பின்னர் மே 5-6 ல் என்ன நடந்தது? : ப.சிதம்பரம் கேள்வி…

கடந்த திங்கட்கிழமை லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்தியா தந்த பதிலடியில் சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.

இந்நிலையில், லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.

இதில், பிரதமர் மோடியுடன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மார்க்சிஸ்ட்டின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 20 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:இன்று, நம் நிலத்தின் ஒரு அங்குலத்தின் மீதும் யாருடைய கண் பார்வையும் கூட விழ முடியாத திறனை நாம் கொண்டிருக்கிறோம்.

இந்திய ஆயுதப் படைகள் ஒரே நேரத்தில் பல்வேறு பிராந்தியங்களுக்கு செல்லும் திறனை கொண்டுள்ளன.

அவர்கள் (சீனா) எல்லையில் ஊடுருவவில்லை. அவர்களால் எந்த ஒரு இந்திய முகாமும் கைப்பற்றப்படவில்லை. 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

நமது பாதுகாப்பு படைகள் நமது எல்லையை பாதுகாக்கும் முழு திறனுடன் உள்ளனர் என்பதை நான் உறுதி அளித்துக் கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பேசியது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், எல்லையில் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்;

ஊடுருவல் இல்லை என்றால் மே 5,6 ம் தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூன் 16, 17 ம் தேதிகளில் ஏன் இருநாட்டு துருப்புக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது ஏன்? என்றும் 20 வீரர்கள் உயிரிழந்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.