விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அதிகார பூர்வ அறிவிப்பு!

ஆர்.கே.நகரில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை, முதலில் ஏற்பதாகவும், பின்னர் பரிசீலிப்பதாகவும் கூறிய அதிகரிகள், இறுதியில் அதிகாரபூர்வமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வென்ற தொகுதியான ஆர்கே நகருக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. திங்கள் கிழமையுடன் (04.12.17) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

செவ்வாய்க் கிழமை (05.12.17) தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது, விஷாலை முன்மொழிந்தவர்கள் தாங்கள் விஷாலை முன்மொழியவில்லை எனவும் எங்கள் கையெழுத்து போலியாக வழங்கப்பட்டது என்றும் தெரிவித்ததாக கூறி விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தனர்.

இதையடுத்து, தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக தெரிவித்த நடிகர் விஷால், தனது வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் விஷாலின் வேட்பு மனுவை விசாரித்தனர்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், அவர் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், நடிகர் விஷாலின் வேட்புமனுவை பரிசீலினை செய்த தேர்தல் அதிகாரிகள் அவரின் ஆதாரத்தை ஏற்க மறுத்து, வேட்பு மனுவை நிராகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் இதைச் சட்ட ரீதியாக அணுகப் போவதாகவும், தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து முறையிடப் போவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதை மீறியும் தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லையென்றால், சுயேச்சையாக நிற்கும் இளைஞர்களில் ஒருவருக்காக பிரச்சாரம் செய்து அவரை வெற்றி பெறச் செய்து மக்களுக்கு நல்லது செய்வேன்” என்று தெரிவித்தார்.