தமிழகமெங்கும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை : நாளை முதல் அமல்…

தமிழகமெங்கும் நாளை முதல் கைப்பை, தேநீர் குவளைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, அமலுக்கு வருகிறது.

தடையை மீறிப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.

இதற்கான அரசாணையின்படி, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை,

பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி ஆகியவற்றுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களின் உறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் வாங்கும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் தரப்பட மாட்டாது என்பதால், பொதுமக்களே துணிப்பைகளை கையில் எடுத்து செல்ல வேண்டும்

பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து பிளாஸ் டிக் பைகளையும், குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாரேனும் வைத்திருந்தால், வார்டு அலுவலகங்களில் மாலைக்குள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.