2ஜி ஊழல் என்று கூறி ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது மன்னிப்பு கேட்குமா?: குஷ்பு கேள்வி..


காங்கிரஸும், திமுகவும் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி ஆட்சியை பிடித்த பாஜக தற்போது மன்னிப்பு கேட்குமா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி சிபிஐ நிரூபிக்கத் தவறி விட்டதாக, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட14 பேரும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த குஷ்பு,

இந்த வழக்கில் பொய் குற்றச்சாட்டுகள்தான் ஆரம்பம் முதலே இருந்தது. தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாஜக மன்னிப்பு கோட்குமா? எனத் தெரியவில்லை.

ஏனென்றால் 2014ஆம் ஆண்டு 2ஜி ஊழல் என்று கூறிதான் பாஜக ஆட்சியை பிடித்தது. அத்துடன் போஸ்டர்கள் உட்பட அனைத்து பிரச்சாரங்களிலும் காங்கிரஸும், திமுகவும் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக கூறினர்.

ஆனால் தற்போது அனைவரும் விடுதலையாகியுள்ளதால் பாஜக சார்பில் மன்னிப்பு கேட்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.