ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் பயணியின் டுவீட்டால் மீட்பு…


பயணி ஒருவர் டுவிட்டரில் அனுப்பிய தகவல் மூலம், ரயிலில் கடத்தி செல்லப்பட்ட 26 சிறுமிகளை போலீசார் மீட்டனர்.

கடந்த 5ம் தேதி, முசாபர்புர் – பந்த்ரா அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டரில், தான் எஸ் 5 கோச்சில் பயணிப்பதாகவும், பெண் குழந்தைகள் அழுதவாறு உள்ளதாக தகவல் அனுப்பினார்.

மேலும், பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரையும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த அதிகாரிகள், உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினரை உஷார்படுத்தினர். கோரக்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த போது, ரயில்வே போலீசார், குழந்தைகள் நல அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து அந்த பெட்டியிலிருந்த குழந்தைகள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 26 சிறுமிகள் அனைவரும் 10 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள்.

அவர்களுடன் பயணித்த 22 மற்றும் 55 வயது மதிக்கத்தக்க நபர்களை கைது செய்தனர். சிறுமிகள் அனைவரும் பீஹாரின் கிழக்கு சாம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சிறுமிகள், மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.