400 மீட்டர் ஓட்டத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரங்கனை ஹிமா தாஸ்…


பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) சார்பில், 20 வயதிற்கு உட்பட்டவர் களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார்.

இதற்கு முன் 2002 ல் சீமா புனியாவும், 2014 ல் நவஜீத் கவுர் தில்லானும் மட்டுமே இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.

ஹிமா தாஸ் பந்தய இலக்கை 51.46 விநாடிகளில் அடைந்துள்ளார். இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஹிமா புதிய வரலாறு படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து :

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:

20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ., ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தடகள வீராங்கனை ஹிமா தாசால் இந்தியா மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த சாதனை இளம் தடகள வீரர்கள் பலருக்கும் இனி வரும் காலங்களில் உத்வேகமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.