6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!

ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சுமார் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!

7 மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற்ற ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

மேற்கு வங்கம், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

டெல்லி உட்பட இன்று தேர்தல் நடைபெற்ற பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் கண்டறியப்பட்டு தேர்தல் அதிகாரிகளால் மாற்று ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட்டன. இதனால், பல இடங்களில் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்கள் படி., ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றது, இன்றைய வாக்குப்பதிவில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 80% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம் பின்வருமாறு (துல்லியமான விவரம் பின்னர் தெரியவரும்) :

  • பீகார் – 55.04%
  • ஹரியானா – 62.14%
  • மத்திய பிரதேசம் – 60.02%
  • உத்தர பிரதேசம் – 50.82%
  • மேற்கு வங்கம் – 80.13%
  • ஜார்கண்ட் – 64.46%
  • டெல்லி – 55.44%