தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு : இதுவரை 35 பேர் உயிரிழப்பு…

தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இதனால் கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் 29,500 மின் கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள், 495 மின் கடத்திகள், 205 மின் மாற்றிகள், 500 கி.மீ. மின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது புயல்-மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சாய்ந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.