அரசு மற்றும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆணை..

தமிழ்நாட்டில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடுகளை, தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியிருக்கிறது.

இந்த வகையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களுக்கும்,

காவல்துறை டிஜிபி, ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், பல்வேறு துறைகளின் செயலர்களுக்கும், கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.

இவை தொடர்பான அறிக்கையை, வருகிற 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.